Tuesday, July 16, 2013

ராஜாஜி கல்வித் திட்டம்


Varadarajan Srinivasan16 July 11:59
ராஜாஜி கல்வித் திட்டம்

நன்றி : பாரதி பயிலகம் வலைப்பூhttp://bharathipayilagam.blogspot.in/2011/12/blog-post_1010.html

ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம்

1952 முதல் 1954 வரை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த புதிய கல்வித் திட்டம் மிகப் பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கி இறுதியில் அவர் பதவி விலகலில் கொண்டு போய் முடிந்தது. எதிருப்பு அலையைத் தொடங்கி வைத்தவர்கள் எதிர்க்கட்சியினராக இருந்த போதும், அதன் முடிவில் அவர் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியினரும் அந்த எதிர்ப்பில் ஈடுபட்டு ராஜாஜியின் நோக்கத்துக்குக் காரணங்களைக் கற்பித்ததன் விளைவாக அவர் பதவி விலகினார். உண்மையில் ராஜாஜி இந்தக் கல்வித் திட்டம் பற்றி சொன்ன கருத்துக்களும், அதனைக் கொண்டு வர காரணிகளையும் புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தத் திட்டம் பற்றி ராஜாஜி என்ன சொன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1953ஆம் ஆண்டில் அதாவது 58 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது அவர் செங்கல்பட்டில் பேசிய பேச்சை இப்போது பார்ப்போம். இனி ராஜாஜியுடன் ..........

"புதிய கல்வித் திட்டம் பற்றிய, பல்வேறு விவாதங்களையும், அந்த திட்டத்திற்கான ஆதரவுகளையும் குறித்து, அனைவரும் கவனம் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயம் மிகவும் சிக்கலானது. பெரும் விவாதங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பல பெரிய விஷயங்கள் எந்தவிதக் கேள்வியும், பிரச்சனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஆனால் சில சிறிய விஷயங்கள், உரிய முறையில் புரிந்து கொள்ளப் படுவதில்லை. இத்தகைய உணர்வுகள் இயற்கையானதே. ஒரு பாறை அல்லது கல் என்பது ஆபத்தான பொருள் என்று நாம் அறிவோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள காற்றின் சக்தியினை நாம் அறிவதில்லை. ஆதாரக் கல்வித் திட்டத்தை நான் காற்றோடு ஒப்பிடுவேன். காற்று என்பது மரங்களை வீழ்த்திச் சாய்க்கும் அளவிற்கு வலிமையானதாகும். ஆதாரக்கல்வி என்பது கண்ணுக்குத் தெரியாத காற்றினைப் போல் எங்கும் பரவ வேண்டும். அத்தகைய ஆதாரக் கல்வியை நான் வாழ்க்கையின் சுவாசம் என்றுகூட அழைப்பேன்.

இந்த ஆதாரக் கல்வித் திட்டத்தின் பின்னால், பெரியதொரு சதி உள்ளது என்று சொல்வது வருந்தத் தக்கதாகும். இந்தத் திட்டத்தின் காரணகர்த்தாவாக நான் இருப்பதால், இத்திட்டத்தின் பின்புலத்தில் 'ஏதோ' இருக்கிறது என்ற சந்தேகம் சிலருக்கு வருகிறது. இறையருளால் இந்தத் திட்டத்தை வேறு யாரேனும் செயல்படுத்தியிருந்தால் வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும். இந்தத் திட்டம் பற்றி நான் முப்பது வருடங்களுக்கும் முன்னரே ஆலோசனை சொல்லியுள்ளேன். அந்தத் திட்டத்தை யாரேனும் செயல்படுத்துவார்கள் என்றும் எண்ணினேன். ஆனால் யாரும் அதைப் பற்றிக் கருதவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதைப் பற்றி, நான் கடந்த காலத்தில் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. எனது வயது முதிர்ந்த காலத்தில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை வேறு சிறந்த மனிதர்களிடம் ஒப்படைக்காமல், நான் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியினை சிலர் எழுப்பக்கூடும். அது கேள்வியின் ஒரு பக்கமாகும். பல ஆண்டுகளாக செயல்படுத்தாத இந்தத் திட்டத்தினை, இப்பொழுதாவது செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளேன். இந்தத் திட்டத்தைப் பற்றி சில காலத்திற்கு, மக்கள் என்னைத் தூற்றுவார்கள். பின்னர் அது ஓர் முடிவுக்கு வரும்.

இந்த எளிய திட்டத்தைப் பற்றி பெரும் எதிர்ப்புகள் ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்திய வரலாற்றில், கல்வி சம்பந்தமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எவரும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. பழங்காலத்தில் இந்திய வரலாறு படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. பின்னர் இந்தப் படிப்புக்கான உத்தரவு மாற்றப்பட்டு, இந்திய வரலாறு படிப்பது, தடை செய்யப்பட்டது. அந்தச் சூழ்நிலையில் எவரும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. அதேபோன்று, ஆங்கில வரலாறு படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவை நீக்க யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. உடற்கூறு தொடர்பான கல்விக்கும், இதே நிலைமைதான் ஏற்பட்டது. இந்த விஷயங்களைப் பற்றிய செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரசுரிக்கவோ, அல்லது மற்ற மேடைகளில் பேசப்படவோ இல்லை. பழங்காலத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்த ஆதாரக் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்த நினைக்கும் நானோ துரதிர்ஷ்டசாலியாவேன்.

இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் வேளையில், ஆதாரக் கல்வித் திட்டத்திறேகான எதிர்ப்புக்களின் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதைப் பற்றிய கருத்துக்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நெடுங்காலமாக, சாதிமுறைகள் நடைமுறையில் இருந்து வந்தன. கலப்புத் திருமணங்களும், சமபந்தி போஜனங்களும் பல்வேறு சமூக அமைப்புக்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தன. ஒரு நெசவாளர் தன் குடும்ப விழாக்களை, தன்னைச் சார்ந்த சமுதாயத்தோடு நிறுத்திக் கொண்டார். சலவைத் திழிலாளர்களும், மற்றத் தொழில் செய்பவர்களும் அவ்வாறே செயல்பட்டனர். அத்தகைய மாந்தர்கள், தங்களை ஒரு கூட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு, மற்றவர்களுடன் இயல்பாகவும், சுலபமாகவும் பழகவில்லை. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பின்னர், பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். கல்வி கற்கும் ஆர்வம் கொண்டவர்களைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்கச் சொன்னார்கள். அந்தக் காலகட்டத்தில் இருந்த கல்வி முறையையும், நாம் தற்போது அறிமுகப்படுத்தவுள்ள, திருத்தி அமைக்கப்பட்ட கல்வி முறையையும் இணைத்துப் பேச வேண்டாம். அத்தகையப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் வசூலிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கலின் நிர்வாகம் நகராட்சியின் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.

குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள், அந்தப் பள்ளிகளில் படிக்க வைத்தார்கள். காலப் போக்கில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கான காரணம் என்னவென்றால், பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ ஏதேனும் ஓர் வேலை கிடைத்தது. வேலை கிடைக்கப் பெற்றவர்களுக்கு, அதிக சுமையோ, கஷ்டங்களோ இல்லாமலே போதிய சம்பளம் கிடைத்தது. தற்போதைய சூழ்நிலையில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உண்டாகி, அதன் காரணமாக ஏமாற்றம் கொண்டுள்ளனர்.

ஒரு குதிரைப் பந்தயத்தில் எல்லோரும் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தோற்றவர்கள் மனவருத்தம் கொண்டு, அரசாங்கம் ஏன் குதிரைப் பந்தயத்தைத் தடை செய்யக் கூடாது என்று கேட்கும் அளவிற்கு மன உளைச்சல் கொண்டுள்ளார்கள். இந்த மனச்சோர்வானது முதன் முறையாக குதிரைப் பந்தயத்திற்குப் போகும்போது ஏற்படுவதில்லை. குதிரைப் பந்தயத்தில் அனைவரும் வெற்றிபெற முடியாது. அதே போன்று, எல்லோருக்கும் அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்காது. படித்தவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை கொடுக்க முடியாது என்ற உண்மையை பொதுமக்கள் உணர்ந்துள்ளார்கள். படித்தவர்களிடையே வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த நிலைமை முன்னேற்றமடைந்த சமூகத்தினருக்கும் பொருத்தமாகும். படித்த எவருக்கும் வேலை கிடைக்கும் என்ற உறுதியான நிலைமை இன்று இல்லை.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புக்கு மேல் படிப்பதில், அதிக உற்சாகம் காட்டுவதில்லை. எதிர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்களுக்கும், மேற்கொண்டு படிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாத நிலை ஏற்படக்கூடும். படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற மனோபாவம், குழப்பமான எண்ணங்களை உருவாக்குகிறது. இது ஒருவிதமான நோய் போன்றது.

கல்வி என்பதன் உண்மையான பொருள் அறிவினைப் பெறுவது என்பதேயாகும். இந்தக் கோணத்தில் பார்த்தால் கல்வி என்பதன் அர்த்தம் தற்போது தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டும் அல்ல. தற்போது செயல்படுத்த உள்ள அடிப்படைக் கல்வித் திட்டமானது, கல்வி கற்கும் காலத்தை பாதியாகக் குறைத்து விடுகிறது. அதன் நடைமுறையானது நாம் உண்ணும் உணவில் பாதி உணவை உண்பதற்குச் சமமாகும் என்ற விமர்சனமும் எழுகின்றது. இது தவறாகக் கொள்ளப்பட்ட கருத்தாகும். அவ்வாறு அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதி, மதம், தொழில் என்ற பாகுபாடுகளைக் களைந்து அனைவரும் இந்தக் கல்வியைப் பெற வேண்டும். அது வாழ்க்கையின் சுவாசம் போன்றதாகும்.

பிரிட்டிஷ்காரர்களின் காலத்தில் நிலவிய கல்வி முறையையும் தற்போதைய கல்வி முறையையும் மக்கள் பகுத்துணர்ந்து, தாரதம்மியத்தைக் கண்டு கொள்ள வேண்டும். உடல் உழைப்பால் வாழும் எளிய மக்களாக, கூலித் தொழிலாளி, சலவைத் தொழிலாளி அல்லது ரிக்ஷா இழுப்பவர் ஆகியோரின் குழந்தைகளுக்குப் படிக்கும் வாய்ப்புக்களை அளிக்க முடியுமா என்ற பெரிய கேள்வி எழுகின்றது. அவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பது மிகவும் நல்ல விஷயமாகும். அந்த நிலைமையை எப்படிப் பெறுவது என்பதுதான் கேள்வியாகும். திறமை மிகுந்தவர்களை மட்டும் தயார் செய்ய வேண்டும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். எல்லோருக்கும் கல்வி என்ற வாய்ப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். கற்பதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் அதிகமான தொடர்பு இல்லை. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், புதிய கல்வித் திட்டத்தின் குறிக்கோளைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு மூன்று மணி நேரத்தில் கற்பிக்கலாம் என்ற நிலைமை இருந்தால் அவர்களை ஐந்து மணி நேரத்திற்கு ஏன் தொல்லைப்படுத்த வேண்டும். ஒரு மாணவன் தனியாக விடப்பட்டால், அவன் மரத்தின் மீது ஏறுவான் அல்லது எதுவுமே செய்யாது சோம்பிக் கிடப்பான் என்றும் சிலர் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு விமர்சனம் செய்பவர்களின் எண்ணம் என்னவென்றால், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் கருதுகிறார்கள். மாணவர்கள் முன்னதாகவே பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தால் பெற்றோர் ஏமாற்றம் கொள்கிறார்கள். இத்தகைய எதிர்ப்புகளை தெரிவிப்பவர்களைப் பற்றி நான் பரிதாபம் கொள்கிறேன்.

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் பொழுது பல வகையிலும் கலந்து ஆலோசிக்கலாம். பரிசீலனைகளையும் செய்யலாம். திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமானால், மக்கள் மனமாற்றம் கொள்ள வேண்டும். கிராமப் பகுதியில் உள்ள பகுதிகள் மக்களிடமிருந்து தனித்து விலகியே உள்ளன. இந்த நிலை மாற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு 'பாலிடெக்னிக்'காக மாற வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். புதிய கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தொழில் முறைக் கல்வி பயில்வதற்கு எதிரானவர்கள் என்றே நான் கருத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஒவ்வொருவரும் தனது கரங்களைப் பயன்படுத்தும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். இத்தகைய விருப்பத்தினை இளம் பிராயத்திலேயே வளர்க்க வேண்டும். அத்தகைய பயிற்சி, நாட்டின் வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் துணையாக நிற்கும். திருத்தி அமைக்கப்பட்ட கல்வியானது நிறைந்த அளவில் உயர்படிப்புக் கல்விகளுக்கான வாய்ப்பினையும் அளிக்கிறது. நமது கரங்களைப் பயன்படுத்தாமல் இருந்தால், ஒரு கோழியானது இரண்டு இறக்கைகளை உடையதாக இருந்தாலும் பறக்காமல் இருப்பதைப் போன்றதேயாகும். வேலை கிடைக்காத பட்சத்தில் ஒருவன் தனது கரங்களைப் பயன்படுத்திப் பொருள் சம்பாதித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

முதலில் கல்வி கற்போம். அதன் பின்னர் தொழிலினைக் கற்றுக் கொள்வோம் என்று சிலர் ஆலோசனை அளிக்கிறார்கள். இந்தக் கருத்து எனக்கு ஏற்புடையது அன்று. இளம் பிராயத்தில் விஷயங்கள் மனதில் சுலபமாகப் பதிந்துவிடும். மக்கள் அனைவரும் குறிப்பாகக் கிராமத்தில் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு கிராமத்தில் ஒரு மனிதனாவது குழந்தகளுக்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அத்தகைய வழிகாட்டிகள் அதிக அளவில் முன் வந்தால் ஒரு சங்கமே அமைக்கலாம். வழிகாட்டிகள் அதிகம் படிக்காதவர்களாக இருந்தாலும் பாதகமில்லை. ஆதாரக் கல்வித் திட்டத்தில் கல்வி கற்றுவரும் குழந்தைகள், தங்களது கரங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, சிந்தனைச் செல்வத்தையும் வளர்த்துக் கொள்வார்கள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை.

"இராஜாஜியின் உரைகள்" பாரதிய வித்யாபவன் வெளியீடு.
தமிழாக்கம்: திரு த.கணேசன், முன்னாள் நிலைய இயக்குனர், அகில இந்திய வானொலி, திருச்சிராப்பள்ளி. த.க.அகிலா.

No comments:

Post a Comment